குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
உதவி ஆட்சியர், டிஎஸ்பி வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப் 1ஏ முதல்நிலைத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் மொத்தம் 2.49 லட்சம் தேர்வர்கள் குரூப்-1,1ஏ தேர்வு எழுதினர். தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக சென்னையில் 170 மையங்களில் 41,094 பேர் தேர்வெழுதினர்.
எழும்பூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்ற நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும். அடுத்த 3 மாதங்களில் குரூப் 1, 1ஏ முதன்மை தேர்வுகள் நடைபெறும். குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வுக்காக எளிமைப்படுத்தப்பட்ட ஓ.எம்.ஆர். தாளை அறிமுகப்படுத்தி உள்ளோம். நடப்பாண்டில் இதுவரை 10,227 வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இன்னும் 12,000 வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.” என்று தெரிவித்தார்.