சிதம்பரத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் அறிவித்துள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள சம்பந்தம் கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த வெடி தயாரிப்புக் கூடத்தில், வழக்கமாக 10க்கும் மேற்பட்டோர் பணியில் இருப்பார்கள். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் லதா( 37) என்கிற பெண் மட்டும் நாட்டு வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வெடி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருந்த லதா உடல் சிதறி பலியானார். மேலும், நாட்டு வெடி தயாரிப்புக் கூடமும் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில் உயிரிழத பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பெரியகுமட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (15.06.2025) காலை சுமார் 11.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புவனகிரி வட்டம், சின்னக்குமட்டி கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த திருமதி.லதாகுமாரி (வயது 37) க/பெ.மணிவண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.