எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை , அவ்வப்போது இலைங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இலங்கை கடற்படை ஒருபக்கம் என்றால், இலங்கை கடற் கொள்ளையர்கள் மறுபக்கம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது , அவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது என அச்சுறுத்தி வருகின்றனர்.
ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு முறை மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து ஆட்டூழியம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரையும் நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.