நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லையில் நடைபெற இருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், கட்சியினர் தடையை மீறிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து, அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் போராட்டத்திற்குப் புறப்பட முயன்றால், அவரை உடனே கைது செய்ய போலீசார் தயாராக உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் காரணம், சட்டம் ஒழுங்கைப் பேணுவதே எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே நள்ளிரவில் இருந்து போராட்டத்தைத் தடுக்க நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நெல்லைக்கு வந்த நாதக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரையும் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.
