உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது திருக்கார்த்திகை தீபத்திரு விழாவாகும்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரம், முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோவிலின் முன்புள்ள 63 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இந்த கொடியேற்ற விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், கோவில் இணை ஆணையார் மற்றும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
