தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 08ம் தேதி வெளியானது. பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். 4.05 லட்சம் மாணவிகளும், 3.47 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 16) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மே 16 காலை 10ஆம் வகுப்பு முடிவும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.