கானா : கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற நபர் தன்னைத் தானே தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, 2025 டிசம்பர் 25-ஆம் தேதி (கிறிஸ்துமஸ் தினம்) முதல் கடும் மழை மற்றும் ராட்சத வெள்ளத்தால் உலகம் அழிந்துவிடும் என்று கணித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று, உலகளவில் பெரும் பரபரப்பையும் கேலியையும் ஏற்படுத்தியது.
எபோ நோவா கூறியதாவது, கடவுள் தனக்கு தோன்றி இந்த அழிவு குறித்து எச்சரித்ததாகவும், பைபிளில் வரும் நோவாவின் பேழை போன்ற 8 அல்லது 10 பெரிய மரக் கப்பல்களை (பேழைகளை) கட்டுமாறு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார். கானாவின் குமாசி பகுதியில் இந்த பேழைகளை கட்டி வருவதாக வீடியோக்களில் காட்டினார். அழிவுக்கு பிறகு இந்த பேழைகளில் தப்பிய மக்களை மீண்டும் பூமியில் குடியமர்த்துவேன் என்று அவர் கூறினார்.
இவரது பேச்சை நம்பிய பல பின்தொடர்பவர்கள் தங்களது சொத்துக்களை விற்று பண உதவி செய்து பேழைகளை கட்ட உதவினர். சிலர் அழிவிலிருந்து தப்பிக்க பேழைகளில் இடம் கேட்டு அவரைத் தேடி வந்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலர் கேலியாகவும் அச்சத்துடனும் பகிர்ந்தனர்.இந்நிலையில், எபோ நோவா திடீரென தனது அறிவிப்பை மாற்றிக்கொண்டார்.
தான் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், கடவுள் உலக அழிவை (கடும் மழை மற்றும் வெள்ளத்தை) தற்காலிகமாகத் தள்ளிவைத்துவிட்டதாக புதிய வீடியோவில் அறிவித்தார். இந்த மாற்றம் அவரது பின்தொடர்பவர்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற உலக அழிவு கணிப்புகள் ஏற்கனவே பலமுறை வந்து தவறாகப் போயுள்ள நிலையில், இந்த சம்பவமும் அறிவியல் ரீதியாக எந்த அடிப்படையும் இல்லாதது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பைபிளில் கடவுள் வெள்ளத்தால் உலகை மீண்டும் அழிக்க மாட்டேன் என்று உடன்படிக்கை செய்துள்ளதை சுட்டிக்காட்டி, இது மதரீதியாகவும் முரண்பட்டது என்று பலர் விமர்சிக்கின்றனர். கானா அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும், இது போன்ற போலி கணிப்புகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
