திமுக பொதுக்கூட்டத்தில் இந்து மதம் மற்றும் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி பேசிய சேலம் திமுக எம்பி செல்வகணபதி, திருச்செங்கோட்டில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளனர்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்பியுமான செல்வகணபதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் இடங்கண சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, இந்து மதம், வழிபாட்டு முறைகள் மற்றும் மந்திரங்களை கொச்சைப்படுத்தி பேசினார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி, கோடிக்கணக்கான இந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்வில் செல்வகணபதி பங்கேற்றுள்ளார்.
தங்கள் குடும்பம், பரம்பரை பரம்பரையாக ஸ்ரீபாதம் என்னும் தேருக்கு பலகை போட்டு திருப்பணிகளை மேற்கொண்டு வருவதாகக்கூறி, அதுகுறித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து விமர்சித்துள்ள நெட்டிசன்கள், ஊருக்குத்தான் உபதேசமா? என்றும், பதவிக்காக கொள்கை என்ற பெயரில் கோஷம் போடுவதா? எனவும், நாத்திகம் பேசும் நீங்கள் ஏன் தேரை இழுத்தீர்கள் என்றும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர்.
