ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், நவ்காம் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராணுவ நிலைகளில் இருந்து சிறிய ரக ஆயுதங்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும், அந்தத் தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்கிலேயே இந்த அத்துமீறல் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த உயிரிழப்புகள் குறித்து இதுவரை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
