கஜகஸ்தானில் மிகப் பெரியளவில் அரியவகை தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாடு சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ளது.
பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரியவகை மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீன நாடுதான் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் கஜகஸ்தானின் கரகண்டா பிராந்தியத்தில் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரியவகை தாது படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட மதிப்பீடுகளின்படி சுமார் 9,35,400 மெட்ரிக் டன் அரியவகை மண் தாதுக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.
சராசரியாக ஒரு டன்னுக்கு 700 கிராம் என்ற அளவில் அரிய வகை மண் தாதுக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. கஜகஸ்தானிடம் இந்த அரிய உலோகங்களை வெட்டி எடுக்கவோ, பிரித்தெடுக்கவோ தேவையான தொழில்நுட்பம் இல்லை. அதற்கு தேவையான உட்கட்டமைப்பை உருவாக்க 2031-ம் ஆண்டு வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு கஜகஸ்தானை உயர் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் முக்கிய இடத்தில் நிலைநிறுத்தும் என கூறப்படுவதால், சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ளது.
