‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..!!

Estimated read time 1 min read

இந்தியாவின் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான கடற்கரை எல்லை, 200-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய கடலோர நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தங்களது கடற்படை செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் சூழல், கடற்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்த தேவையை முன்னிட்டு, இந்திய கடற்படை தனது போர்க்கப்பல் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் அஞ்சதீப், சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ‘ஷாலோ வாட்டர்’ போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், 80 சதவீத உள்நாட்டு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல், ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளில் மறைந்து செயல்படும் எதிரி நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் பெற்றது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனம் கட்டிய இந்த கப்பல், கடலோர மற்றும் ஆழமற்ற கடல் சூழல்களில் செயல்படுவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.780 கோடி செலவில் உருவான இந்த போர்க்கப்பல், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் நீண்ட கடற்கரை பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 77 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல், அதிவேக நீர்-ஜெட் உந்துவிசை அமைப்புடன் 25 நாட்டிகல் வேகத்தில் பயணிக்கக் கூடியது. அதிநவீன சோனார் அமைப்புகள், இலகுரக டார்பிடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் மேம்பட்ட போர்முறை மேலாண்மை அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த கப்பல்கள் ரோந்து, கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும்.
ஐஎன்எஸ் அஞ்சதீப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, இந்தியா தொன்மையான கடல்சார் நாகரிகம் கொண்ட நாடு என்றார். மேலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு கடல்களுடன் இணைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறியுள்ளார். பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகரிப்பது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பேசிய அவர், “இந்தியப் பெருங்கடல் பகுதி எதிர்கால கடல்சார் நூற்றாண்டின் மையமாக மாறி வரும் நிலையில், அஞ்சதீப் போன்ற கப்பல்கள் கடலடித் தாக்குதல்களை எதிர் கொண்டு, இந்திய கடற்படையின் திறனை பல மடங்கு உயர்த்தும். கார்வார் அருகே உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சதீப் தீவின் பெயரால் அழைக்கப்படும் இந்த போர்க்கப்பல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி, சக்தி வாய்ந்த கடற்படை வளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நம் வரலாற்றிலேயே புதிய மைல்கல். அதே போல, வரும் 2035-க்குள் இந்திய கடற்படையை 200க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்ட கடற்படையாக மாற்றுவதே நமது இலக்கு. தற்போது, 50 கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களிலேயே கட்டப்பட்டு வருகிறது” என்றார்.
Please follow and like us:

You May Also Like

More From Author