மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சி வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அர்கசி கிண்டலாக விமர்சித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், எரிசக்தி தட்டுப்பாட்டைப் போக்கவும் அமெரிக்கா தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, உக்ரைன் போரால் ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை 30 நாட்களுக்கு மட்டும் தளர்த்தி, ரஷ்ய எண்ணெய் கப்பல்களை வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்கா சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்கசி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியச் செய்தித்தாள் கட்டுரை ஒன்றைப் பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது,
The U.S. spent months on bullying India into ending oil imports from Russia. After two weeks of war with Iran, White House is now begging the world—incl India—to buy Russian crude.
Europe thought backing illegal war on Iran would win U.S. support against Russia.
Pathetic. pic.twitter.com/fbkrXpXa9P
— Seyed Abbas Araghchi (@araghchi) March 13, 2026
“கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டாம் என்று இந்தியாவை மிரட்டுவதிலேயே அமெரிக்கா குறியாக இருந்தது. ஆனால், ஈரானுடனான இரண்டு வாரப் போருக்குப் பிறகு, நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. இப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு வெள்ளை மாளிகை கெஞ்சி வருகிறது. ஈரான் மீதான போரை ஆதரித்தால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என ஐரோப்பா நினைத்தது எவ்வளவு பெரிய கொடுமை.
ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் வளைகுடா பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி, தான் தடுத்த ரஷ்ய எண்ணெயையே மீண்டும் சந்தைக்குக் கொண்டுவர அமெரிக்கா முயன்று வருவது சர்வதேச அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது.
