கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பாஜக எம்எல்ஏ தலைமையில் சுவாமி விக்கிரகங்களுடன் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்சி நடுதலவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவின் இறுதி நாளில், சுவாமி விக்கிரகங்கள் மேள தாளங்கள் முழங்க தேங்காய் பட்டினம் கடல் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டன.
அப்போது ஊர்வலத்தை திடீரென தடுத்து நிறுத்திய போலீசார், மங்கல இசையை நிறுத்திவிட்டு செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தில் தீர்வு ஏற்பட்டதையடுத்து அம்மன் விக்ரகங்களை மீண்டும் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர்.
