மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது மத்தியஸ்த தேவைகளுக்காக 1981 முதல் பாகிஸ்தானைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். “நாங்கள் ஒரு தரகு நாடு அல்ல, நாங்கள் ஏன் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஈரானின் அணு ஆயுத முயற்சிதான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குக் காரணம் என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஈரான் தலைவர் கமேனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் மத்திய அரசு விரிவான பதில்களை அளித்தது.
எரிசக்தி பாதுகாப்பு குறித்துப் பேசிய அரசு அதிகாரிகள், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவின் பெட்ரோல் மற்றும் எல்பிஜி இருப்பு போதுமான அளவில் உள்ளதாக உறுதியளித்தனர். அடுத்த 4 முதல் 5 நாட்களில் 4 முக்கியக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்றும், கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
போர்க்களத்தில் இருந்து இதுவரை சுமார் 4,25,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எரிபொருள் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் இக்கூட்டத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
