தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ சூழல் உருவாகி வரும் நிலையில், ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவர் விஜய் கூட்டணி ஆட்சிக்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனி ஒருவனாக 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட விஜய், தற்போது ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட, திமுக கூட்டணியில் இருந்து விலகி தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கட்சிகளுக்கு, அமைச்சரவையில் இடம் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த உத்தரவாதத்தைத் தவெக தரப்பு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை திராவிடக் கட்சிகள் வழங்கத் தயங்கிய இந்த ‘அதிகாரப் பகிர்வு’ என்ற ஆயுதத்தை விஜய் தற்போது கையில் எடுத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமைய வழிவகை ஏற்படும். இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியலுமே தற்போது பரபரப்பின் உச்சத்தில் உள்ளது.
