சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தெளிவாக அறிவித்துள்ளது.
பாஜக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:“தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதே நோக்கத்துடன் சட்டமன்றத் தேர்தலிலும் களம் கண்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகளை கட்சியானது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும், அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம்.எனவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.
ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.”தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில் பாஜகவின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பாஜக தரப்பில் இருந்து வெளியான இந்த அறிக்கை, தேர்தல் முடிவுகளை மதிப்பதாகவும், அதேசமயம் ஆட்சி அமைப்பு செயல்பாட்டில் இருந்து விலகி நிற்பதாகவும் தெரிவிக்கிறது.
