அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்க தற்போது 14 முக்கிய அம்சங்கள் கொண்ட ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராகி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்படி, இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டினால் அடுத்த 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உடனடியாக நீக்குவதுடன், முடக்கப்பட்ட ஈரானின் பல பில்லியன் டாலர் சொத்துக்களும் திருப்பி அளிக்கப்படும்.
மேலும், உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தடைகளை நீக்கி, கடல்வழிப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இருப்பினும், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் கால அளவில்தான் இன்னும் இழுபறி நீடிக்கிறது. ஈரான் தனது அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியம் செறிவூட்டுவதை 20 ஆண்டுகளுக்குத் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது, ஆனால் ஈரான் 5 ஆண்டுகள் மட்டுமே போதும் என பிடிவாதம் பிடிக்கிறது.
தற்போது இந்தத் தடைக்காலத்தை 12 முதல் 15 ஆண்டுகள் வரை வைக்க இரு நாடுகளும் சமரசத்திற்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஈரான் 3.67 சதவீதம் வரை மட்டுமே யுரேனியத்தைச் சேமிக்க வேண்டும் என்பதும், அதை அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதும் முக்கிய நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பதை உலகம் முழுவதும் தற்போது உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
