சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்,“தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, முடிவுகளை எடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தேசியத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது” என்றார். இந்த நிலையில், சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தரப்பில் முக்கிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை தவெக பெறக் கூடாது என்பதே அந்த நிபந்தனை. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு (118) தேவையான ஆதரவைப் பெறும் முயற்சியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த ஆதரவு பேச்சுவார்த்தை முடிவுகள் அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் இப்போது தவெக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் பேச்சுவார்த்தை முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்கிற நிலை உருவாகியுள்ளது.
