முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திருச்சி செல்லவுள்ளதை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தவெக ஆட்சி அமைத்து முதல்முறையாக முதலமைச்சர் இன்று மாலை 4 மணிக்கு திருச்சி செல்கிறார்.
தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நன்றி தெரிவிக்கும் விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் ஆய்வு செய்தார்.
இதனியைடயே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று திருச்சி செல்ல உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களை முதல்வர் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இதையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் தெரிவித்தார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.
கனரக வாகனங்கள் மாற்று வழியில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறி ட்ரோன் கேமரா பறக்கவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
