தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என, திருவல்லிக்கேணி போலீசாருக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அவர்கள் இருவரும் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், காவல்துறையினர் பதிவு செய்துள்ள இந்த வழக்கில் தனது பெயரோ அல்லது தனது சகோதரர் அசோக்குமாரின் பெயரோ முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும், வழக்கில் பெயரே இல்லாதபோது தங்களை எப்படி விசாரணைக்கு ஆஜராகும்படி கூற முடியும்? எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறைகளின்படி தனக்கு முறையான நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், சட்டத்திற்குப் பயந்து தான் எங்கும் ஓடி ஒளியவில்லை எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
