நைஜீரியாவில் ஓகுன் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவை முடித்துவிட்டு கனோ மாநிலம் திரும்பி வந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட குழுவினர் சென்ற பேருந்து, மேம்பாலத்தின் மேலிருந்து தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தில் மொத்தம் 35 பேர் பயணித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாக அதிகாரிகள் ஆவார்கள். இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததோடு, மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்ததும் அருகிலிருந்தவர்கள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் பலர் அப்போதே உயிரிழந்தனர். நைஜீரியாவில் சாலைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுவதால், இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 9,500க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி, பேருந்து ஓட்டுநர் நீண்ட நேரம் ஓய்வின்றி வாகனம் ஓட்டியதாலும், அதிக வேகத்தில் சென்றதாலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.