வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த முன்மொழிவில் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஈரான் ஒப்புக்கொண்டாலும், அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைக்கும் ஈரானின் யோசனையை ட்ரம்ப் ஏற்க மறுத்துள்ளார்.
ஏப்ரல் 27, 2026 அன்று தனது ஆலோசகர்களுடன் நடத்திய சந்திப்பில் ட்ரம்ப், ஈரான் தரப்பின் முன்மொழிவை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றாலும், ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவதற்கும், அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதற்கும் உறுதியளிக்காததாகவும் கூறினார்.அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, வெள்ளை மாளிகை விரைவில் ஈரானுக்கு எதிர்முன்மொழிவை (counterproposal) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ், “அமெரிக்கா பத்திரிகைகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தாது. நாங்கள் எங்கள் எல்லைக் கோடுகளை (red lines) தெளிவாகக் கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் ஈரானின் முன்மொழிவை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.ஈரான், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த உடன்பாட்டை முன்மொழிந்துள்ளது.
ஆனால் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை பின்னர் நடத்தலாம் என்று தாமதப்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளது.இதேவேளையில், அமெரிக்காவின் தடை காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான், எண்ணெயை ரயில் மூலம் கொண்டு செல்வது அல்லது “junk storage” எனப்படும் தற்காலிக சேமிப்பு இடங்களில் வைப்பது உள்ளிட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்தி வருகிறது.
ஏப்ரல் 13 அன்று அமெரிக்கா விதித்த தடைக்குப் பிறகு, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகக் குறைந்துள்ளது. குறைந்தபட்சம் ஆறு டேங்கர்கள் அமெரிக்கத் தடை காரணமாக திரும்ப அனுப்பப்பட்டுள்ளன. ஈரானின் எண்ணெய் சேமிப்பு திறன் 95 மில்லியன் பீப்பாய் ஆகும். போர் தொடங்குவதற்கு முன்பு 4.6 மில்லியன் பீப்பாயாக இருந்த சேமிப்பு, தற்போது 49 மில்லியன் பீப்பாயாக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் சேமிப்பு இடம் முழுமையாக நிரம்பிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
