சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் 3,644 சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி 391 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மாநகராட்சியில் நடைபெற்று மேம்பாட்டு பணிகள், மழையால் சாலைகளில் ஏற்பட்ட சேதம் என பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் மழைக் காலத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைய நேரிடுகிறது. தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி விட்டதால், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்தியுள்ளது.
சென்னையில் 387 கி.மீ தொலைவிற்கு 471 பேருந்து தட சாலைகள், 5270 கி.மீ தொலைவிற்கு உட்புறச் சாலைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த பருவமழையின் போது சேதமடைந்த சாலைகளை, மூன்று தொகுப்புகளாக சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 857 சாலைகள் 63.2 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் திட்டத்தின் கீழ் 1197 சாலைகள் 149 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பேரிடர் சிறப்பு திட்டத்தின் கீழ் 1590 சாலைகள் 180 கோடி மதிப்பீட்டிலும் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 3 தொகுப்புகளின் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் டெண்டர் முடிவு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே போடப்பட்ட சாலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அளவு, அதன் ஆழத்தை கணக்கிட்டு புதிதாகப் போடப்படும் சாலை, அதில் பயன்படுத்தப்படும் தார்க்கலவையின் தரம், சாலையின் நடுவிலிருந்து ஓரத்துக்கான சாய்வுஅளவு ஆகியவற்றை ஆய்வு செய்து, சாலைகளை உரிய அளவுகளின் படியும், சரியான தரத்திலும் அமைப்பதை உறுதி செய்யுமாறும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலைப் பணிகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.