வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கள் கிழமை, தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பண்டிகையை முடித்துவிட்டு திரும்பும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அக்டோபர் 21ஆம் தேதியையும் (செவ்வாய் கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டுகளின் போன்று இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அக்டோபர் 21, 2025 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அக்டோபர் 25, 2025 (சனிக்கிழமை) அன்று பணிநாள் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், அரசு ஊழியர்கள் ஆகியோரின் நலன் கருதி மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
