புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர, தி.மு.க. அரசில் கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது., மகளிருக்கு உரிமைத்தொகை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னபோது, அப்படியெல்லாம் தர முடியாது என்று, யார் சொன்னார்..? தமிழ்நாட்டின் நிர்வாகத்தை பாழ்படுத்திய அ.தி.மு.க.-வும் சொன்னார்கள். ஆனால், நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரி செய்ததுமே உரிமைத்தொகையை வழங்க ஆரம்பித்தோம்.
அப்போதும், என்ன சொன்னார்கள் என்றால், இந்த திட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்று அவர்கள் வதந்தியை கிளப்பினார்கள். ஆனால், அதற்கு மாறாக இதுவரைக்கும் 27 மாதங்களில் 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 27 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம். 1,000 ரூபாய் எதற்கென்று சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன்… எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்குகின்ற மாதாந்திர சீர் என்று என்னுடைய சகோதரிகள் சொல்கிறார்களே. இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை.
இந்தத் தொகையை வழங்க ஆரம்பிக்கும்போது என்னிடம் கேட்டார்கள் “யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய்?” கிடைக்கும் என்று சட்டமன்றத்தில் கேட்டார்கள். நான் சொன்னேன், “யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்” என்று நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் – தகுதியுள்ள எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும். நான் உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும்போது, நம்முடைய திராவிட மாடல் 2.0 அரசிலும் நிச்சயம் தொடரும்.
சமூக முன்னேற்றத்திற்காக – விளிம்புநிலை மனிதர்களுக்கு உதவுவதற்காக – எளிய மனிதர்களை அரவணைப்பதற்காக – பின்தங்கியுள்ள மக்களை கைதூக்கி விடுவதற்காக – நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று பேசினார்.
