தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது.
காவல்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 46 மையங்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர்.
சென்னையில் மட்டும் 9 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர்.
தேர்வில் முறைகேட்டை தடுக்க விண்ணப்பதாரர்களின் இடது கை கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வினை நான்காயிரத்து 491 பேர் எழுதினர்.
தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், தேர்வர்களை
முறையாக சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். தேர்வை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
