“அனைவரையும் மன்னித்துவிடு மகனே!” – 22 விநாடி வீடியோவில் உறைந்துபோன இணையம்; ஹரிஷ் ராணாவின் கடைசி நிமிடங்கள்!

Estimated read time 1 min read

சுதந்திர இந்தியாவில் உயிருடன் செயலற்று இருக்கும் ஒருவருக்கு கருணைக்கொலை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன், 53 ஆண்டுகளுக்கு முன்னர், 1973ஆம் ஆண்டு மும்பை மருத்துவமனையில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயதான செவிலியர் அருணா ஷான்பாக் என்பவருக்கு ‘உயிர் நீக்கம்’ உரிமையை உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது.

அவரை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதிக்காத சூழலில், அவர் சுமார் 40 ஆண்டுகள் கோமா நிலையிலேயே இருந்தார். கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் பின்னர் கருணைக்கொலையை நீதிமன்றம் அனுமதித்தது.

ஆனால், செயலில் இருப்பவரை கருணைக்கொலை செய்வதை இறுதியில் மறுத்தது. தொடர்ந்து அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2015இல் நிமோனியாவால் அவர் உயிரிழந்தார்.

ஆனால், தற்போது ஹரிஷ் ராணாவுக்கு உச்ச நீதிமன்றம் கருணை கொலை செய்ய அனுமதி அளித்திருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது.

மேலும், பெற்றோரை பாராட்டியது. நீதிபதிகள் அவர்களின் தீர்ப்பில், “ஒருவரை நேசிப்பது என்பது மகிழ்ச்சியான நேரங்களில் மட்டுமல்ல, அவர்களின் சோகமான மற்றும் கஷ்ட காலத்திலும் அவர்களுடன் இருப்பதும் அரவணைப்புதான்” என குறிப்பிட்டனர். மேலும், பெற்றோர் ஆழ்ந்த சோகத்தால் வாடியிருப்பதையும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

நாட்டில் முதல்முறையாக உயிர் நீக்க சிகிச்சைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதன்படி ஹரிஷ் ராணாவின் உயிர் காக்கும் மருத்துவ இணைப்புகளை மருத்துவர்கள் துண்டித்தனர். அவரது தாயார் பிரியா விடை கொடுத்த சம்பவம் இணையவாசிகளை வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனதை உருக்கும் 22 விநாடி வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினர், அவரின் கடைசி நிமிடங்களில் அவருடன் இருக்கும் தருணத்தை வீடியோவில் காண முடிகிறது. தீராத வலியில் இருந்து விடுதலையாகும் தனது மகனின் முகத்தை பார்த்து, ஹரிஷ் ராணாவின் பின்னால் அமர்ந்திருக்கும் அவரது தாயார் உணர்ச்சிவசப்படுவதை வீடியோவில் காண முடிகிறது.

சமூக கலாச்சார தன்னார்வ அமைப்பான பிரம்ம குமாரி அமைப்பினர் தொடர்ந்து ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். இந்த அமைப்பினர்தான் வழக்கறிஞரை ஏற்பாடு செய்துகொடுத்து உச்ச நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு சட்டப்போராட்டம் நடத்த உதவினர். இன்று வெளியான வீடியோவில் பிரம்ம குமாரி அமைப்பைச் சேர்ந்த பெண், ஹரிஷ் ராணாவின் நெற்றியில் திலகமிடுவதை பார்க்க முடிகிறது. “அனைவரையும் மன்னியுங்கள், எல்லோரிடமும் மன்னிப்பு கேள். இப்போது செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது…” என அந்த பெண் திலகமிடும்போது ஹரிஷ் ராணாவிடம் சொல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author