சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது சரமாரி புகார்களை அடுக்கியுள்ளார்.
தமிழகத்தில் ‘தமிழ்’ என்ற சொல்லையே மெல்ல மெல்ல மறைத்துவிட்டு, எல்லா இடத்திலும் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் திணிப்பதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது என்றும், இது அன்னைத் தமிழுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் என்றும் அவர் சாடினார்.
குறிப்பாக, யுகாதி திருநாள் வாழ்த்துகளில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழி வேற்றுமையை விதைத்து பிரிவினையைத் தூண்டுவது மிகுந்த வேதனைக்குரியது எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நிலவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத இந்த அவல ஆட்சியைப் பற்றி வைகோவோ, திருமாவளவனோ அல்லது கம்யூனிஸ்டுகளோ வாய் திறக்காதது ஏன்? அவர்கள் எங்கே போனார்கள்?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
இதே வேளையில், பாஜகவின் முக்கியமான தேர்தல் அறிக்கை இன்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், தமிழக அரசியலில் பாஜகவின் பலம் இந்தத் தேர்தலோடு நிரூபிக்கப்படும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
