மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், இப்போது ஒரு பயங்கரமான ‘எரிசக்தி போராக’ (Energy War) உருவெடுத்துள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மற்றும் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ‘தெற்கு பார்ஸ்’ மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவுக்கு அதிகப்படியான எரிவாயுவை விநியோகிக்கும் கத்தார் நாட்டின் எல்என்ஜி (LNG) நிலையங்கள் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இது இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, மத்திய அரசு இப்போது தனது “ஆக்ஷன் பிளான் 2.0”-வை கையில் எடுத்துள்ளது.
கத்தார் மற்றும் பிற வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பியிருக்காமல், இந்தியாவின் நீண்டகால நண்பனான ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் தளர்வுகளுக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ள இந்தியா, இப்போது மக்களின் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவை நோக்கித் திரும்பியுள்ளது.
“எங்கள் மக்களுக்கு எரிபொருள் கிடைப்பதே முதல் முக்கியத்துவம்” என இந்தியா எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, எரிசக்தி நெருக்கடியில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் ஒரு தற்காப்பு அரணாகப் பார்க்கப்படுகிறது.
