உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி தடையின்றித் தொடர்கிறது.
அதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘ஜக் லாட்கி’ (Jag Latki) என்ற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் சுமந்து வந்த கப்பல், இன்று வெற்றிகரமாகக் குஜராத் துறைமுகத்தை வந்தடைந்தது.
போர் பதற்றம் தொடங்கிய பிறகு வளைகுடா பிராந்தியத்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்துள்ள 3-வது பெரிய கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கப்பலில் சுமார் 81,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவி வரும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் நீடித்தாலும், இந்தியாவின் சாதுர்யமான வெளியுறவுக் கொள்கை காரணமாகத் தடையின்றி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது பொருளாதார ரீதியாகப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணெய் வருகை பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
