பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு பாமக மற்றும் சசிகலாவின் அஇபுமமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராமதாஸ், சசிகலாவின் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தனது தலைமையிலான கூட்டணியில் தானே முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதாக தெரிவித்த ராமதாஸ், தங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் கூறினார்.
மேலும், கொள்கை அளவில் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
