திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி முடிந்து மூன்றாவது சனிக்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு அனுகிரக மூர்த்தியாக தனி சன்னதியில் வீற்றிருக்கும் சனிபகவானை தரிசனம் செய்ய சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம்.
கடந்த 6ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனீஸ்வரர் பகவான் இடம்பெயரும் சனி பெயர்ச்சி நடைபெற்றது. சனி பெயர்ச்சியின் பலன் 48 நாட்கள் வரை இருப்பதால் சனிப்பெயர்ச்சி முடிந்து மூன்றாவது சனிக்கிழமையான இன்று கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
அதிகாலை முதலே நளதீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
