டெல்லியில் தேசியத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு கோவை திரும்பிய அண்ணாமலை, தேர்தல் களம் குறித்து அதிரடியான புகார்களை அடுக்கினார். “கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் கரூரில் இருந்து வந்து ஒரே நோட்டரியிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமிகள்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் உள்ளூர் திமுகவினரை மதிக்காமல் கரூர்க்காரர்களை இறக்குமதி செய்து பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்க குத்தகைக்கு எடுத்துள்ளதாக அவர் சாடினார். மேலும், எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுக்களில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய அவர், அவற்றை அதிகாரிகள் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு காவல்துறை முறையான அனுமதி வழங்க வேண்டும் என்று அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். “கூட்டம் கூடுகிறது என்பதற்காக அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது, கூடுதல் பாதுகாப்பைத் தர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். இதேபோல், புதுச்சேரியில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்தும் சந்திக்காததைச் சுட்டிக்காட்டி கூட்டணிக்குள் விரிசல் இருப்பதை விமர்சித்தார்.
“நாளையிலிருந்து எனது பிரச்சாரம் தொடங்குகிறது, மதுரையிலும் பிரச்சாரம் செய்வேன்” என்று கூறிய அவர், செந்தில் பாலாஜியின் தோல்வி கோவையிலிருந்து தொடங்கி சேப்பாக்கம் வரை எதிரொலிக்கும் என்று சவால் விடுத்துள்ளார்.
