ஈரானுக்கு எதிராக ‘336 மணிநேர’ (14 நாட்கள்) போர்த் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்க்கவும் அதன் இராணுவக் கட்டமைப்பை அழிக்கவும் அமெரிக்கா இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அமெரிக்காவின் சென்ட்காம் தளபதி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் டிரம்ப் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த ’14 நாள்’ போர் வியூகத்தில் தரைவழித் தாக்குதல், வான்வழித் தாக்குதல் மற்றும் கடல்வழி முற்றுகை என மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியைக் கைப்பற்றுவது மற்றும் ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான இஸ்பஹானைக் குறிவைப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இதற்காக இஸ்ரேலுக்குத் தேவையான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் அமெரிக்கா வாரி வழங்கியுள்ளது. ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கவும், அதன் தலைமைப் பதவிகளைச் செயலிழக்கச் செய்யவும் அமெரிக்க இராணுவம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டத்திற்கு ஈரான் தரப்பிலிருந்தும் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் ஆணவத்தை அடக்கும் வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மோதலில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் அரபு நாடுகளின் அரண்மனைகளும் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரானியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
வல்லரசுகளுக்கு இடையேயான இந்தப் போட்டி மத்திய கிழக்கில் ஒரு மாபெரும் போரைத் தூண்டி, உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது.
