தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசியலில் கடந்த 59 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – அதிமுக ஆதிக்கத்தை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பர்’ கிடைக்காததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். சபாநாயகர் ஒருவரை நியமித்தால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக-வின் பலம் 106 ஆகக் குறையும்.
இதனால் ஆட்சி அமைக்க விஜய்க்கு இன்னும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. தற்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் மொத்தம் 20 இடங்களை வைத்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் (5), விசிக (2), கம்யூனிஸ்ட் கட்சிகள் (4), ஐயுஎம்எல் (2), தேமுதிக (1). அதிமுக கூட்டணியில் பாமக (4), பாஜக (1), அமமுக (1). இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி தவெக-விற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே விஜய் முதலமைச்சராக முடியும்.
தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமைந்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது: தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம். அல்லது, ஆதரவு தரும் கட்சிகளிடமிருந்து கடிதங்களைப் பெற்றுத் தருமாறு விஜய்க்கு உத்தரவிடலாம்.
விஜய்யால் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவைத் திரட்ட முடியாவிட்டால், இரண்டாவது பெரிய கட்சியான திமுக-வை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கலாம். யாருமே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். அவ்வாறு நடந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழல், ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
