இன்று புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்பு..!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் நேற்று மாலை 04.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிலையில், புதிய எம்எல்ஏக்களின் பதவியேற்பு இன்று (மே 11) நடைபெறவுள்ளதாக சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே 11) காலை 09.30 மணிக்கு கூடுகிறது. இதில் புதிதாகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து, நாளை (மே 12) காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரைத் தேர்வுச் செய்வதற்கான தேர்தல் நடைபெறும். பதவியேற்க வரும் உறுப்பினர்கள், தங்களது வெற்றி சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 13- ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author