சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தவெக சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், எம். ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலர் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக பதவியேற்ற நிலையில், இன்று மீதமுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகர் பதவிக்கு தவெக சார்பில் ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகர் பதவிக்கு எம். ரவிசங்கரும் (முசிறி) மனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் போட்டியிடாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மரபுப்படி, அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு சுமூகமாக நிறைவு பெற்றது. இதன்மூலம் சட்டமன்றத்தின் முழுமையான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
