தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் நடப்பு கோடைக் காலத்தில் வெப்பநிலை 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்துள்ளதோடு, அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அண்மையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தால் மாணவர்களின் நலன் கருதி முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பள்ளி திறப்பு தேதியை மாற்றுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வார ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் வெளியாகலாம் எனப் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
