சென்னை : தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று (ஜூன் 17) 10 மாவட்டங்களிலும், நாளை (ஜூன் 18) 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இருப்பினும் வெப்பநிலை சற்று குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 19 மற்றும் 20 தேதிகளிலும் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
