இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

ஒரு காலத்தில் சோலார் மின்சாரம் என்றாலே பெருநகரங்கள்தான் முன்னணியில் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. இந்தியாவின் 2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்கள்தான் சூரிய சக்தி பயன்பாட்டில் புதிய வரலாறு படைத்து வருகின்றன. ஏன் இந்த மாற்றம்? யார் இதற்கு காரணம்? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

இந்தியாவில் சூரிய மின்சார உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு முகவரியாக இருப்பது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் அல்ல. மாறாக, லக்னோ, நாக்பூர், சூரத், வாரணாசி, எர்ணாகுளம் உள்ளிட்ட இரண்டு மற்றும் 3-ஆம் நிலை நகரங்கள்தான் இன்று Rooftop Solar அமைப்புகளில் வேகமாக முன்னேறி வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் சூரிய வீடு மின்சார திட்டம். வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க மானியம் வழங்கப்படுவதால், நடுத்தர மற்றும் சாதாரண குடும்பங்கள் அதிகளவில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஒருமுறை முதலீடு செய்தால், பல ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால், சோலார் அமைப்புகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வீட்டிலேயே பயன்படுத்துவதோடு, மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கே வழங்கும் Net Metering முறையும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், மின்கட்டணத்தை குறைப்பதோடு, சில குடும்பங்கள் கூடுதல் வருமானத்தையும் பெறும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெருநகரங்கள் ஏன் பின்தங்குகின்றன என்ற கேள்வியும் எழுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக இருப்பது, தனித்தனி மேற்கூரைகள் இல்லாதது, கட்டட அனுமதி மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் ஆகிய காரணங்களால், பெருநகரங்களில் Rooftop Solar விரிவாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை.

இதனால், இந்தியாவின் சோலார் வளர்ச்சியை இப்போது சிறிய நகரங்கள்தான் வழிநடத்துகின்றன. சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் Rooftop Solar அமைப்புகளை ஊக்குவித்தால், மின்சார உற்பத்தி மட்டுமல்ல, மின்கட்டணச் சுமையும் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வலுப்பெறும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு காலத்தில் சோலார் என்பது வசதி படைத்தவர்களின் தேர்வாக இருந்தது. இன்று அது சாதாரண குடும்பங்களுக்கே சாத்தியமாகியிருக்கிறது.

பெருநகரங்களை விட, சிறிய நகரங்களே இந்தியாவின் பசுமை ஆற்றல் புரட்சிக்கு புதிய முகவரியாக உருவெடுத்திருப்பது, நாட்டின் எரிசக்தி எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

You May Also Like

More From Author