ஜப்பான் தூதரை நேரில் அழைத்து சீனா கண்டனம்

Estimated read time 1 min read

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா, இந்த விவகாரத்தில் ஜப்பான் தூதரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கடல்சார் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தென் சீன கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவதன் பின்னணி என்ன? அதனால் சர்வதேச நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

சீனாவின் தென் பகுதியில் அமைந்திருக்கும் தென் சீன கடல் வழியாக சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மூன்றில் ஒரு பங்கு கடல்வழி வர்த்தகம் நடைபெறுகிறது.

ஈரான், ஓமன் இடையே உள்ள ஹோர்மூஸ் நீரிணையைப் போல முக்கியத்துவம் வாய்ந்த, பரந்த அளவிலான தென் சீன கடலுக்கு ஆண்டாண்டு காலமாக உரிமை கொண்டாடும் சீனா, அந்தக் கடல் வழியாக செல்லும் பிற நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

இதுமட்டுமன்றி, தென் சீன கடலில் தனது ரோந்து கப்பல்களை அனுப்பி உளவுபார்ப்பது, கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிப்பது என இந்தப் பிராந்தியத்தை எப்போதும் பதற்றத்திலேயே சீனா வைத்திருக்கிறது.

குறிப்பாக தென் சீனக் கடல் வழியாக சென்ற பிலிப்பைன்ஸ், வியட்நாம், புரூணே உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை சீனா தாக்கியதால், பல ஆண்டுகளாகவே இந்தப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

இதனால் சீனாவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின் கடல்சார் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் தீர்ப்பாயத்தை பிலிப்பைன்ஸ் நாடியது.

இந்த வழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த தீர்ப்பாயம், தென் சீன கடலுக்கு வரலாற்று ரீதியாகவே சீனா உரிமை கொண்டாட முடியாது என தீர்ப்பளித்தது. ஆனால், சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க மறுத்த சீனா, இந்த உத்தரவு செல்லுபடியாகாது என்றும், தென் சீன கடல் மீதான தங்களது ஆதிக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகமோ இன்னும் ஒரு படி மேலே போய், சர்வதேச தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு வெற்று காகிதம் என எள்ளி நகையாடியது.

இந்தத் தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட 13 நாடுகள் சர்வதேச தீர்ப்பாயம் பிறப்பித்த இந்த உத்தரவு வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது என கூறியதுடன், அதை சீனா மதித்து நடக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. ((GFX-OUT))

இந்தப் பட்டியலில் தனது அண்டை நாடான ஜப்பானும் இணைந்தது சீனாவுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், பெய்ஜிங்கில் உள்ள ஜப்பான் தூதரை நேரில் அழைத்து சீனா கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், தனது பிராந்திய விவகாரத்தில் ஜப்பான் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக குற்றம்சாட்டியது.

தென் சீனக் கடலில் சீனாவின் இறையாண்மை ஒருபோதும் மாறிவிடாது என கூறியுள்ள சீனா, பிற நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாமென ஜப்பானுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தனது அண்டை நாடுகளை பலவீனப்படுத்திவிட்டு, தென் சீன கடலில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் சீனா சமீப காலமாகவே குறியாக இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இறையாண்மைமிக்க தனிநாடான தைவான் மீது உரிமை கொண்டாடி வரும் சீனா, அதை தனது நாட்டின் ஒருபகுதியாகவே கருதுகிறது.

இதனால்தான் சர்வதேச பிரதிநிதிகள் தைவானுக்கு சுற்றுப்பயணம் சென்றால், முதல் நபராக ஓடிவந்து சீனா கண்டிக்கிறது. என்னதான் சீனா தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடாக இருந்தாலும், அதன் பாதுகாப்புத் துறை அதிநவீன தளவாடங்களைக் கொண்டிருந்தாலும், பாதுகாப்பு என்று வரும்போது அதன் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தான் செய்கிறது…

You May Also Like

More From Author