புல் நுனிப்பூக்கள்.

புல் நுனிப் பூக்கள்
நூல் ஆசிரியர் : கவிதாயினி வ. விசயலட்சுமி
பூவரசு பதிப்பகம், 30/8, கன்னிக்கோவில் பள்ளம் அபிராமபுரம் முதல்தெரு, சென்னை-600 018. பக்கம் : 80 விலை. : ரூ. 80
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

******

‘புல் நுனிப் பூக்கள்’ கவித்துவமான தலைப்பு. நூலாசிரியர் கவிதாயினி வ. விசயலட்சுமி அவர்கள் புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர். சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சமூகத்தையும் ஆய்வு செய்து துளிப்பா ஹைக்கூ வடித்து வருபவர். பல்வேறு இதழ்களில் பிரசுரமான துளிப்பாக்களை தொகுத்து நூலாக்கி உள்ளார்.

பேராசிரியர் எ.மு. ராசன் பாவலர் புதுவைத் தமிழ் நெஞ்சன் மின்மினி இதழ் ஆசிரியர் கன்னிக்கோவில் இராசா ஆகியோரின் அணிந்துரை வரவேற்புத் தோரணங்களாக உள்ளன. நூலாசிரியர் 10 க்கு மேற்பட்ட நூல்கள் எழுது உள்ளார். பல்வேறு பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார்.

ஆற்றில் இறங்க / அழகர் வந்தார் / ஆறு?

முதல் துளிப்பாவே மதுரையின் இன்றைய நிலையை எடுத்து இயம்புவதாக இருந்தது. அழகர் ஆற்றில் இறங்க ஆறு ஓடவில்லை. செயற்கையாக தொட்டிக்கட்டி தண்ணீர் நிரப்பி அதில் தான் அழகர் இறங்க வேண்டி உள்ளது.

நாடு கடத்தப்பட்டார் / புத்தர் / அன்பிலா நாடு!

அன்பை போதித்த புத்தரை கடவுளாக வணங்கிடும் சிங்களர் சிறிதும் அன்பின்றி இலங்கை இராணுவம் தமிழினப் படுகொலை நடத்திய நிகழ்வை நினைவூட்டும் விதமாக வடித்த விதம் அருமை!

சுத்தமாக கைகள் / கறையாகிப் போனது / தேர்தல்!

வாக்களிக்க வருபவர்களுக்கு அழியாத மை வைத்து கறையாக்குகின்றனர் என்பது ஒரு பொருள். வாக்களிக்க பணம் வாங்கி கறையாகி விடுகின்றனர் என்பது ஒரு பொருள்.

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாட்டில் இந்தியாவில் தேர்தலே கறையாகி விட்ட்து என்பது ஒரு பொருள். ஒரு துளிப்பா மூலம் பல பொருள் உணர்த்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

ஆறு நிறைய / சரக்குந்துகள் / மணல் கொள்ளை.

நீதிமன்றங்களில் பல தீர்ப்புகள் வழங்கிய போதும் மணல் கொள்ளை மட்டும் நின்றபாடில்லை. தண்ணீர் ஓட வேண்டிய ஆறுகளில் சரக்குந்துகள் ஓடுவது வருங்கால வாரிசுகளுக்கு வஞ்சம் செய்யும் செயலாகும். வளத்தை அழிக்கும் கொடூரமாகும். “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் நினைவிற்கு வந்தது.

காட்டில் தீ / எரிந்து மடிந்தது / எத்தனை புல்லாங்குழல்களோ?

முன்பே எழுதிய இந்த துளிப்பா குரங்கனி காட்டின் தீ விபத்தை நினைவூட்டியது. பலியான உயிர்களை புல்லாங்குழல் என்றும் பொருள் கொள்ளலாம்.

விடுமுறை இல்லை / பணி ஓய்வில்லை / இல்லத்தரசி!

வீட்டில் சும்மா தான் இருக்கிறாள் என்று சொல்லி அறிமுகம் செய்து வைக்கும் இல்லத்தரசிக்கு ஞாயிறு விடுப்பு இல்லை. வருடம் முழுவதும் வேலை. தொல்லை அவர்களின் இன்னலை உணர்த்திய துளிப்பா நன்று.

இல்லத்தில் துன்பம் / துன்பத்தில் இன்பம் / திருமணம்!

திருமணம் பற்றி மிக இயல்பாக எதார்த்தமாக சொற்-சிக்கனத்துடன் வழங்கிய விளக்கம் முற்றிலும் உண்மை.

கற்றது கையளவு / மறந்ததோ கடலளவு / தேர்வு நேரம்

புகழ்பெற்ற பொன்மொழியை சற்று மாற்றி மாணவர்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டிய விதம் அருமை. பாராட்டுக்கள்.

திருமணம் / சொர்க்கத்தில் / விவாகரத்து?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கின்றனர். பிறகு ஏன் விவாகரத்து நடக்கின்றது என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்பு உள்ளார்.

வறுமையை ஒழிப்போம் / முழங்கினார் தலைவர் / செழித்தனர் உறவினர்!

உண்மை தான். இன்றைய அரசியல்வாதிகள் தான் மட்டும் கொள்ளையடிக்காமல் சம்பந்தி சொந்தம் பந்தம் அனைவரையும் கொள்ளையடிக்க விடும் நாட்டு நடப்பை துளிப்பாவாக்கியது சிறப்பு.

மழைக்கு வான் தரும் / வரவேற்பு மாலை / வானவில்!

அழகு காட்டிடும் வானவில்லை வரவேற்பு மாலையாகக் கற்பனை செய்திட்ட விதம் அருமை புதிய சிந்தனை.

எழுந்தது தமிழகம் / விழுந்தது அரசியல் / சல்லிக்கட்டு

சல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திட்ட போது உலகத்தமிழர்கள் யாவரும் உலகம் முழுவதும் போராடி தடை தகர்த்தனர். அரசியல் இன்றி சாதித்துக் காட்டினார்கள்.

புகுந்த வீட்டிற்கு அனுப்பாமல்
பிறந்த வீட்டிலேயே சிறை
காவிரி!

உச்சநீதிமன்றம் காவேரி ஆற்றுப் பிரச்சனைக்கு கடைசித் தீர்வாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட அறிவுறுத்திய போதும், சட்டைச் செய்யாமல் கர்னாடகாவின் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக போக்குக் காட்டி வருகின்றனர். கல்நெஞ்சம் படைத்த கர்நாடகமும் ஈவு இரக்கமின்றி காவிரியை சிறைப்பிடித்து வைத்துள்ளது பல சிந்தனைகளை விதைத்தது.

பெருமழை அறிவிப்பு / பள்ளிகளுக்கு விடுமுறை / அம்மாவுக்கு?

வருடத்தில் 365 நாட்களும் அம்மாவிற்கு ஓய்வின்றி வேலை. எந்தவித விடுமுறையும் இன்றி குடும்பத்திற்காக உழைத்து வரும் உன்னத உறவு அம்மா. அம்மாவின் அளப்பரிய பணி போற்றுதலுக்கு உரியது.

கஞ்சக்கருமி / அழைத்தான் காக்கையை / அமாவாசை!

தானம் தரும் எண்ணம் இல்லாத கஞ்சன் அமாவாசையன்று காக்கையை அழைத்து சோறு வைக்கும் முரண்பாட்டை உணர்த்தி பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்துள்ளார்.

அழகிய முகம் / உள்ளே நஞ்சு! / நாகம்!

அழகு, அதில் ஆபத்து உள்ளது என்று உணர்த்தியது சிறப்பு.

ஏவுகணைத் தந்தை / ஏகினார் விண்ணை/ தேம்பிடும் இந்தியா!

இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரத்தில் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்து, செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியான மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே அழுதது.

தேர்வில் வெற்றி / வாழ்வில் தோல்வி / மனப்பாடக் கல்வி!

புரிதல் இன்றி மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்வி பயன்படுவதில்லை. இன்றைய கல்வியின் நிலையை உணர்த்திடும் துளிப்பா நன்று. M.A. உளவியல், M.A. தமிழ், M.Phil படித்த ஆசிரியர் படைப்பாளியாகவும் விளங்குவது சிறப்பு. அவர் பயின்றது பயனுள்ள கல்வி.

Please follow and like us:

You May Also Like

More From Author