ஹைக்கூ ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி !
விழிகள் இரண்டு போதவில்லை
சிறகுகள் ரசிக்க
வண்ணத்துப்பூச்சி !
அமர்ந்தாலும் அழகு
பறந்தாலோ அழகோ அழகு
பட்டாம்பூச்சி !
புகை வரும்
நெருப்பின்றி
பனி மூட்டம் !
புல்லின் மீது பனித்துளி
முகம் பார்த்தது
முழு நிலவு !
அம்மாவின் கைமணம் கமழும்
அப்பத்தை நினைவூட்டியது
நிலவு !
கிளைகள் எனும்
கைகள் விரித்து வரவேற்கும்
மரங்கள் !
நிறமோ கருமை
குரலோ இனிமை
குயில் !
கண்டனக் குரல் கொடுத்தன
கூடு கட்டிய பறவைகள்
வெட்டப்படும் மரத்திற்காக !
உடல் நலத்திற்கு நல்லது
அதியமான் அவ்வைக்கு தந்தது
நெல்லிக்கனி !
ஏழைகளின் ஆப்பிள்
ஏழைகளின் வாழ்வாதாரம்
நெல்லிக்காய் !
சிறு துரும்பும்
கூடு கட்ட உதவும்
குருவிக்கு !
கண்களைப் போலவே
மீசையும் அழகு
பூனை !
கழிவு நீர் உறிஞ்சி
இளநீர் தரும்
தென்னை !
கோடையில் வாடி நின்று
கோடைக்கு இதமான நுங்கு தந்தது
பனைமரம் !
இனிமையாக்கியது
பேருந்துப் பயணத்தை
வெள்ளரிக்காய் !
வருடங்கள் உருண்டதை
உணர்த்தின
நரைகள் !