உலகின் முதன்மொழி தமிழே!
– கவிஞர் இரா. இரவி
*****
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
முன்மொழிந்தார் முதல்மொழி தமிழே என்று!
மொழியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து
வழிமொழிந்தனர் அமெரிக்க அறிஞர்கள்!
பாவாணர் சொன்ன போது ஏற்காதவர்கள்
பன்னாடுகள் உரைத்ததும் ஏற்கின்றனர்!
ஐநா மன்றமே அறிவிப்பு செய்யலாம்
அகில உலகின் முதல்மொழி தமிழே என்று!
வழக்கில் இல்லாத செத்தமொழி வடமொழியை
வளம் மிக்க மொழியென வரிந்து கட்டுகின்றனர்!
முதல்மொழிக்குச் சொந்தக்காரனான தமிழனே
முனைந்து தமிழ் படிக்க மறுக்கும் அவலம்!
சிறு நூறு ஆண்டு வரலாறு உள்ள மொழிக்கு
சிலர் வால் பிடித்து வக்காலத்து வாங்குகின்றனர்!
ஆங்கில மொழி உருவாக சொல் தந்தது தமிழ்!
ஆயிரங்காலத்து வரலாறு உள்ள தமிழ்!
தமிழகத்து தமிழர்களே தமிழின் தொன்மையை
தரணிக்குப் பரப்பிட அணிவகுப்போம் வாரீர்!
எங்கும் எதிலும் தமிழ் ஒலிக்க வகை செய்வோம்
எல்லோரும் தமிழை விரும்பிப் படிக்க வாருங்கள்!
இனிய தமிழ்மொழி எங்கும் வரவிட வழிசெய்வோம்
ஒருவருக்கும் ஐயம் வேண்டாம் அறிந்திடுவோம்!
உலகின் முதல்மொழி தமிழே! தமிழே! தமிழே!