ஆன்மீகத்தின் படி தலையெழுத்து என்பது நம்முடைய கர்மாவையே குறிப்பதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் நன்மை, தீமைகள் இந்த கர்மாவின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது. ஆனால் நன்மைகள் நடக்கும் போது யாரும் தலையெழுத்தை பற்றி சிந்திப்பது கிடையாது.
ஏதாவது துன்பம் வரும் போது மட்டும் தான் தலையெழுத்து பற்றிய எண்ணம் அனைவருக்கும் வருகிறது. “என் தலையெழுத்து மாறாதா?” என வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் கேட்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆன்மீகத்தில் நாட்டமே இல்லாதவர்களாக இருந்தாலும் இந்த கேள்வியும், எண்ணமும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
கர்மாவோ, தலையெழுத்தே எதுவாக இருந்தாலும் அதை மாற்ற முடியுமா? என கேட்டால் பக்தியால் அதை மாற்ற முடியும் என சொல்லப்படுகிறது. அப்படி தலையெழுத்து மாற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என கேட்பவர்களுக்கு பதில் இதோ…
சிவ மந்திரம் :
“ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய, மஹாதேவாய,
த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாலாக்கினி காலாய,
காலாக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய, ஸ்ரீமன் மஹாதேவாய நம”
சிவபெருமானின் சக்தி வாய்ந்த திருநாமங்களை சொல்லி, அவரை வணங்கி சரணடைவதாக சொல்வதே இந்த மந்திரத்தின் அர்த்தமாகும். தினமும் அதிகாலையில் எழுந்து காலையில் குளித்து விட்டு, மனதில் சிவ பெருமானை நினைத்து, இந்த மந்திரத்தை சொல்லி, சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இது மிகவும் சக்தி வாய்ந்த சிவ மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் தினமும் அதிகாலை வேளையில் சொல்ல சொல்ல, சிவபெருமானின் அருளால் நம்முடைய கெட்ட கர்மாக்கள் கரைய துவங்கி, நம்முடைய வாழ்க்கையே மாறும். நன்மைகள் அதிகரிக்க துவங்கும்.
ருத்ர மந்திரம் :
“ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர பிரச்சோதயாத்”
இத சிவனின் ஆற்றல், அருள் நமக்கு கிடைப்பதை தடுக்கும் விஷயங்களை தகர்த்து, சிவன் மீதான ஈர்ப்பை தூண்டும் ஆற்றல் கொண்ட மந்திரமாகும். தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு, சுத்தமாக இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் தலையெழுத்தே மாறும் என சொல்லப்படுகிறது.
