பூட்டான் : தலைநகர் திம்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை கடுமையாகக் கண்டித்தார்.
“டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நான் கனத்த இதயத்துடன் பூட்டானுக்குத் திரும்பினேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மேலும், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் முழு நாடும் நிற்கிறது. குடும்பங்களின் வலியை நான் புரிந்துகொள்கிறேன். இந்த சதித்திட்டத்தின் அடிப்பகுதியை காவல்துறை கண்டுபிடிக்கும். எந்த சதிகாரரும் தப்பமாட்டார்கள். பொறுப்பான அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று உறுதிபடக் கூறினார். இது சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்ப முடியாது என்ற தெளிவான செய்தியை அளித்தது.
இரு நாள் சுற்றுப்பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவும் பூட்டானும் எல்லைகளால் மட்டுமல்ல, கலாச்சாரத்தாலும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், கடினமான காலங்களில் ஒன்றாக நின்றதாகவும் நினைவுகூர்ந்தார். “எங்கள் உறவு மதிப்புகள், உணர்ச்சிகள், அமைதி மற்றும் முன்னேற்றத்தால் ஆனது” என்று பேசிய அவர், இரு நாடுகளின் கூட்டாண்மை தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ஐஏ, என்எஸ்ஜி, டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் பயங்கரவாத தாக்குதலா என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், பிரதமரின் இந்தக் கண்டனம் நாட்டுக்கு உறுதியை அளித்துள்ளது.
இதற்கிடையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை (நவம்பர் 12) மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து இந்தக் கூட்டம் கூடுவதால், பாதுகாப்பு மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
