இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறைக்கு ஒரு புதிய பொற்காலத்தைத் திறந்துவிட்டுள்ளது.
அமெரிக்காவின் சுமார் 118 பில்லியன் டாலர் (சுமார் 10.20 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான உலகளாவிய ஜவுளி இறக்குமதி சந்தையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பங்களிப்பை பெருமளவு அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
குறிப்பாக, இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 50 சதவீத வரியானது தற்போது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனா, வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஜவுளிப் பொருட்கள் அதிக விலை போட்டித்திறனைப் பெற்றுள்ளன.
இந்த வரிச் சலுகை இந்திய ஜவுளித் துறையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஜவுளி ஏற்றுமதி இலக்கை அடைய இந்த ஒப்பந்தம் மிக முக்கியப் பங்காற்றும்.
அமெரிக்காவின் மொத்த ஜவுளி இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கு பங்களிப்பை இந்தியா இதன் மூலம் வழங்க முடியும். மேலும், தமிழகத்தின் திருப்பூர் போன்ற பின்னலாடை உற்பத்தி மையங்களுக்கு இந்த ஒப்பந்தம் பெரும் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் திருப்பூரின் ஏற்றுமதி 30,000 கோடி ரூபாயாக உயரும் என்றும், இதன் மூலம் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜவுளித் துறையின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை இது மேலும் வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
