முத்ரா யோஜனா திட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம் தொடங்கப்பட்டது.
அங்கு மத்திய அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இணைவது, இலவச எரிவாயு இணைப்பு பெறுவது உள்ளிட்ட திட்டங்களை பெறுவதை விளக்கும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இணைந்து பார்வையிட்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 2047-ல் நாடு வல்லரசாக வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என கூறினார்.
ஜன்தன் யோஜனா திட்டத்தில் 1 கோடியே 80 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் உள்ளது என கூறிய எல்.முருகன், தமிழகத்திற்கு 40 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகளை மத்திய அரசு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.
