தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “காங்கிரஸுடன் கூட்டணியா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள், நல்லதே நடக்கும்” என அவர் சூசகமாகப் பதிலளித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்துள்ள நிலையில், இந்த கருத்து தவெக – காங்கிரஸ் இடையே புதிய கூட்டணி உருவாவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவிற்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் சில இழுபறிகள் நீடிப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
இந்தச் சூழலில், செங்கோட்டையனின் இந்த “நல்லதே நடக்கும்” என்ற கருத்து, அதிருப்தியில் உள்ள கட்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்க தவெக முயற்சித்து வருவதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் கைகோர்த்தால், அது தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
