ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார்.
தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு இடமே இல்லை; சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை ‘எதிரிகள்’ என்று குறிப்பிட்ட அவர், போரில் உயிரிழந்த ஈரானியர்களுக்காகவும், தனது தந்தை அலி கமெனியின் மரணத்திற்காகவும் அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்களின் சர்வதேச சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அல்லது அழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், மொஜ்தபா கமெனியின் உடல்நிலை குறித்து சர்வதேச அளவில் மர்மம் நீடிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்து, ரஷ்யாவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கோமா நிலையில் இருப்பதாக இஸ்ரேல் கூறி வரும் நிலையில், ஈரானியத் தரப்பிலிருந்து அவரது புதிய புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சூழலில் வந்துள்ள மொஜ்தபாவின் ஆக்ரோஷமான எச்சரிக்கை, ஈரான் உண்மையில் ஒரு பெரும் போருக்குத் தயாராகி வருகிறதா அல்லது இது ஒரு வெறும் காகித மிரட்டலா என்ற விவாதத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
